Wednesday, July 5, 2017

பருத்தித்துறையிலுள்ள தெருமூடி மடமும் அதன் பிரதான இயல்புகளும்.


பருத்தித்துறை – தும்பளை வீதியில் சிவன் கோவிலுக்கு அணித்தாக அமைந்துள்ள இத்தெருமூடி மடமானது பல்வேறு காலகட்டங்களில் திருத்தப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் வந்துள்ளமையைக் காண்கின்றோம். அதன் தொன்மையான வடிவத்தினைக் கண்டு கொள்ள முடியாமலுள்ளது. தற்போதுள்ள கல்லால் அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியானது 150 வருகாலப் பழமை மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.


 திராவிடக்கலைப் பணியில் அமைந்துள்ள அதன் அடித்தளம், தூண்கள் மற்றும் சுவர்ப்பாகங்கள் கட்டிடக்கலை ரீதியாக விரிவாக ஆராயத்தக்கதாகும். வெண்வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகியன சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதனைக் காண்கின்றோம். 'பொழிந்த வெண்வைரக் கற்சதுரங்கள்' பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிகவும் செம்மையான முறையில் பாவப்பட்டு அடுக்கி ஒழுங்கமைக்கப்பட்ட முறையைப்பார்க்கும் போது அவற்றின் சிறப்புக் கூறுகள் அதன் நீணட காலப்பாவனை ஆகியன வெளிப்படுகின்றன.
இருபக்க திண்ணைகளிலும் கல் பாவப்பட்ட தளத்திலிருந்து நான்கு பக்கச்சதுரப்பட்டை அமைப்புடன் ஆரம்பிக்கும் கற்றூண்கள் அவற்றின் கூரையைத் தாங்கும் பகுதியில் தூண்கபோதத்துடன் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இருபக்கங்களிலும் எல்லாமாக 16 தூண்கள் காணப்படுகின்றன. அற்றுள் 6 தூண்களில் தமிழ் வடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. 19ம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவ வளர்ச்சியை அச்சாசனங்களில் காணமுடிகின்றது. இச்சாசனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளை அவற்றைப்படியெடுத்ததன் (நுளவயஅpயபந) பின்னரே வெளிப்படுத்த முடியும்.

therumudi madam

தூண்களின் அமைப்பு தனித்துவமானது. ஒற்றைக் கற்றூண்களாக காணப்படும் இவை நடுவில் எண்பக்கப்பட்டையுடனான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூணின் கபோதம் உட்பட முழுத் தோற்றமுமே பல்லவர் கலை மரபினைத்தழுவி உருவாக்கப்பட்டுள்ள முறையைக் காண்கின்றோம். இத்தெரு மூடி மடத்தினது இரு புறங்களிலும் உயர்ந்த மேடைபோல் காணப்படும் இருபக்கத்  திண்ணைகளினதும் வெளிப்புறச்சுவர்கள் சுண்ணச் சாந்தினால் கட்டப்பட்டவையாக உள்ளன. இவ்விரு திண்ணைபோன்ற தளத்தின் அகல நீளமானவை தூரப்பார்வைக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் நடுமண்டபத்திற்கு இருமருங்கிலும் காணப்படும் நடைமண்டபமாக (ஐளடநள) தோற்றமளிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத் தெரு மூடி மடத்தினது மேற் கூரையானது தூண்களின் கபோதத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்திரமாக மேலெழுப்பப்பட்டுள்ள ஓர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய  ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறையினால் இத்தெரு மூடி மடத்தூடான வாகனப் போக்குவரத்து நடைமுறைகளுக்கு அந்த உயர்ந்த கூரை எவ்விதத்திலேனும் தடையாகவோ, இடைஞ்சலாகவோ அமையாது   ஒரு பொலிவான தோற்றத்தினை தூரப்பார்வைக்கு வழங்குவதனை காண்கின்றோம்.
இத் தெருமூடிமடத்தின் இருபக்க மண்டபகங்களினதும் மேற்கூரை தட்டையானதாக (குடயவந) அமைக்கப்பட்டுள்ளது. நீள்சதுர கூரையமைப்பின் தட்டையான பரப்பினை உருவாக்குவதற்கு நீளமான வெண்வைரக் கற்பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கற்பலகைகளுக்கு மேல் சுண்ணச்சாந்து இடப்பட்டு நீர் கசியாதவாறு வெகுகச்சிதமாக அக்கூரையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.உயர்ந்துள்ள பிரதான நடுக்கூரையின் இருபக்கங்களிலும் காணப்படும் இத்தட்டையான இரு கூரைத்தட்டுக்களின் கூரை முகப்புக்கள் இரு முனைகளிலும் வெளியே தெரியாதவாறு பக்கவாட்டாக அவ்வற்றின் முகப்பில் எழுப்பப்பட்ட கபோதத்தின் மீதான குறுக்கு அரைச் சுவர்களினால் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் கட்டிடக்கலை ரீதியாக நோக்கும் போது யாழ்ப்பாணத்திற்கேயுரிய திருப்பணிக்கல் - கட்டிடக்கலை மரபும் கிறிஸ்தவ கட்டிடக்கலை மரபும் ஒன்றிணைந்த கையில் மீளுருவாக்கம் பெற்றதாகவே இத் தெருமூடி மடத்தினைக் கொள்ள வைக்கின்றது.
இன்றைய நிலையில் இத்தெரு மூடி மடத்தோடு இணைந்திருந்த சுமைதாங்கிக்கல், ஆவுரஞ்சிக்கல், துலாக்கிணறு மற்றும் நீர்த்தொட்டி (கற்தொட்டி) ஆகியன முற்றாகச் செயல் இழந்த நிலையிலேயே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக்குடா hரவலாகக் காணப்படும்  சுமைதாங்கிக்கற்களும், ஆவுரஞ்சிக்கற்களும் 'றோட்டுக்கரைப்பிள்ளையாரை' போன்று 'சும்மா' வீற்றிருக்கின்ற வகையைக் காண்கின்றோம்.

ரயர் - ரியூப் ஒட்டுகின்ற புத்திசாலிகளான சில கடைக்காரர்கள் இவ்வாறு சும்மா கிடக்கும் கற்தொட்டிகளை நகர்த்திச்சென்று தமது தொழிலகங்களில் நீர்த்தாங்கியாக உபயோகிப்பதனையும் காண்கின்றோம். பித்தளைக்குத்து விளக்குகள் வெளிநாடுகளிலுள்ள எம்மவர் மத்தியில் யுளுர் வுசுயுலு ஆகப்பயன்படுத்தப்படுவது போன்று யாழ்ப்பாணத்திலும் கலாச்சாரப் பிறழ்வுகள் மேலோங்கி வருகின்றன.

therumudi madam data

இன்றைய நிலையில் இத்தெருமூடி மடத்தினை இணைத்துள்ள ஒரேயொரு பயன்பாட்டு வெளிப்பாடு ஆடு – மாடுகளின் மற்றும் கட்டாக்காலி நாய்களின் இராத்தங்கும் ஓர் ஆரோக்கியமான மையமாக மட்டுமே காணப்படுவதாகும். தமிழரது பண்பாட்டின் கால ஓட்டத்துடனான பண்பாட்டு விரிசல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்ற இக்காலகட்டத்தில் இச்சின்னங்களை பராமரித்து கட்டிக்காத்து வைத்திருக்க வேண்டிய அடுத்த தேவை என்ன என்பது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு எம்மால் விடையளிக்க முடியாதுள்ளது. இந்துப்பண்பாட்டு மரபில் குறிப்பாக யாழ்ப்பாணத்து சுதேசிய கிராமிய வழமைகளிலும் மனித உறவுகளிலும் ஏற்பட்ட மிகப்பாரிய விரிசல்களாலும் மற்றும் அன்னியப் பண்பாட்டுத் தாக்கங்களினாலும் பொருளாதாரத்தில் யாழ்ப்பாணத்து உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்களினாலும் எம்மவர் மத்தியில் ஏற்பட்ட வாழ்க்கை நிலையாமை போன்ற உளவியற் தாக்கங்கள் ஊடே உருவான மாற்றங்களினாலும் எமது பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கங்கள் உடையணியும் மரபுகள் மற்றும் இறப்பு பிறப்புத் தொடர்பான வழமைகள் சடங்குகள் மரபுகள் யாவும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தை கைவிட்டு மறைந்து சென்றமையின் பின்னணியில் தெருமூடி மடங்கள் ஆற்றிய சேவை இன்று எமக்கு தேவையற்றனவாக இன்றைய யாழ்ப்பாணத்து பண்பாட்டிற்கு அன்னியமானவையாக அமைந்து விட்டதைக் காண்கின்றோம்.





உசாத்துணை நூல்கள்

  1. நகுலன்.க. 2013 வடமராட்சியின் மரபுரிமைச்சின்னங்கள் கமலம் பதிப்பகம் பக்.34-36.
  2. கிருஸ்ணராசா.செ. 2015 தொல்லியிலும் வடமராட்சியின் தொன்மையும் பிறை நிலா வெளியீடு பக்.114-117.











குப்தப் பேரரசர்களின் நாணயங்கள்


வட இந்திய வரலாற்றில் கி.பி 3ஆம் நூற்றாண்டு ஆட்சிக் காலமானது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். வடக்கே இமயம் முதல் தெற்கே குமரிவரையுள்ள ஷத்திரிய ஷேத்திரத்தனை கொண்ட பேரரசுக் கட்டுமானத்தை ஏற்படுத்திக் கொடுத்த காலம் இதுவாகும். மிகப் பலமான இராணுவக் கட்டமைப்பின் பின்னணியில் நிலமானிய சமூக அடிப்படையில் உருவான ஒருவகையான நிர்வாக முறையே பேரரசின் எழுச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.

இந்தியக் கலை மரபின் நோக்கங்களும் இயல்புகளும்


இந்தியக் கலை மரபானது தென்னாசியாவில் தனித்துவம் மிக்கதாகவும் பொதுமையான இயல்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதாகவும் காணப்படுகின்றது. அங்கு அது மக்கள் வாழ்வினையும், மத அனுட்டான முறைகளையும் ஒருங்கே இணைக்கின்ற வகையில் வளர்ச்சி பெற்றுச் சென்றதன் அடிப்படையில் கலையுலகில் தனக்கெனத் தனித்துவமான ஓர் இடத்தினைத் தென்னாசியக் கலை மரபுகள் பெற்றுவிட்ட தெனலாம்.

எனவே இவ்வாறான தனித்துவம் வாய்ந்த கலையின் இயல்புகளையும் அவற்றின் நோக்கங்னளையும் ஆராய்வதற்கு முன்னர் 'கலை' என்றால் என்ன என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
கலை எனப்படுவது செயல் என்ற வினையின் (யுசவ யனெ யுஉவழைn)அடியாகத் தோற்றம் பெற்றுது எனக் கலை நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இக் கலை நிபுணர்கள் 'கலை' என்றால் என்ன என்பதற்கு கொடுக்கும் விளக்கங்கள் காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் வேறுபட்டதாக அமைந்து விடுகின்றது. எது எவ்வாறு அமையினும் 'கலை' என்பது ஒரு வெளிப்பாடே என்பது தான் பொதுமையான கோட்பாடாகும்.
கலை என்பது ஜீவனோபாயத்தின் வெளிப்பாடு என வானமாமலை என்ற அறிஞர் எடுத்துக் காட்டுகின்றார். இவர் கலைகளின் தோற்றம் தொடர்பாக விளக்குகையில், மனிதன் கற் காலத்தில் இருந்தே கலைகளில் ஈடுபட்டு வந்தான் எனக் குறிப்பிடுகின்றார். மனிதன் நாள் முழுவதுமே தனது உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக சில யுக்திகளைக் கையாளவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டான். அதனால் அவன் கருவிகளைப் பயன்னடுத்தத் தொடங்கிய காலம் முதல் அக் கருவிகளானது நிறைவான உபயோகத்தின் பயன்பாட்டிற்காக அவற்றைச் செப்பனிட ஆரம்பித்தான். பின்னர் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக தனது வதிவிடத்தில் பரீட்சித்துப் பார்த்ததின் பின்னணியிலேயே கலைகள் தோற்றம் பெற்றிருக்கலாம் என ஊகிக்னப்படுகிறது. வட ஸ்பெனியில் உள்ள அல்மிரா குகை ஓவியங்களும் இவ் வழியே உருவானவையாகும் என்பது அறிஞர்களது கருத்தாகும். வானமாமலை என்பவர் கலைகளின் தோற்றத்திற்கும் ஜீவனோபாயத்திற்கும் இடையே இருந்திருக்கக்கூடிய நெருங்கிய தொடர்பு முறைக்கு உதாரணமாக இதனை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகின்றார்.

Indian-sculpture



ஆனால் கலை என்பது அழகியல் உணர்வின் அடிப்படையில் தோற்றம் பெற்றது என அழகியல் கலை பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றர். அழகியல் உணர்வின் வயப்பட்ட நிலையில் கலைகள் தோற்றம் பெறுவதற்கு ஓய்வு நேரம் அவசியமானதென்பது குறிப்பிடக்கூடிய ஒரு விடயமல்ல. உற்பத்தி ஒழுங்குகள் நெறிப்படுத்தப்பட்ட காலத்திலே மனிதன் ஓய்வு நேரத்தை அனுபவிக்கத் தொடங்கினான். மிகை உற்பத்தியானது கலை வெளிப்பாட்டினை ஒரு சிறப்புத்தேர்ச்சிக்குரிய அங்கமாக மாற்றியமைத்தது. புராதன நதிக்கரையோர நாகரிகங்களில் கணிதம், விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம் என்பன எவ்வாறு சிறப்புத் தேர்சிசியாளர்களின் பங்களிபடபாக அமைந்ததோ அவ்வாறே கலைகளின் வெளிப்பாடும் சிறப்புத் தேர்ச்சியாளர்களின் கைவண்ணத்தினால் உருவாக்கப்பட்டதாக அமைந்தது எனலாம். இது அழகியல் என்ற அடிப்படையில் ஓய்வு நேர கால சிறப்புத் தேர்ச்சியாக தோற்றம் பெற்றது என்றால் அதிலும் தவறு இருக்க முடியாது.
எது எவ்வாறு இருந்த போதிலும் அழகியல் அடிப்படையிலான கலை உணர்வு ஐரோப்பாவில் 15ம், 16ம், 17ம் நூற்றாண்டுகளில் பெருவளர்ச்சியடைந்தது என்பதனை மறுக்க முடியாது. மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில் அழகியல் உணர்வினால் உந்தப்பட்ட நிலையில் பிரபுக்களும், செல்வந்தர்களும் பாரம்பரியக் கலை அம்சங்களை உருவாக்கியளித்த உரோமானியக் கலைப் படைப்புக்களில் நாட்டம் கொண்டு அவற்றை வெறும் அழகியல் உணர்வின் அடிப்படையில் சேகரித்து வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டடிருந்தனர். விருந்தினர் தங்குகின்ற விடுதிகளிலும், வரவேற்பறைகளிலும் இத்தகைய கலைக் கரூவூலங்கள் அழகியல் நோக்கத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Ajanta_Caves
 எனவே அழகியல் அடிப்படையூடான கலைப் படைப்புக்கள் பற்றிய சிந்தனைகளின் வெளிப்பாடாக ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம் அமைந்தது என்றால் மிகையில்லை.
கலை, வருவாயை ஈட்டித் தருவதாக இப்போது கருதப்படுகிறது. இதனையே ஐவெநச யுசவ என்ற பதம் குறித்து நிற்கின்றது. ஒரே மாதிரியான கலைப் படைப்புக்கள் தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் (ஐனெரளவசயைட யுச) உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதனை இப்போது காணலாம். இத்தைகைய கலைப் படைப்புக்கள் எந்தளவிற்கு அந்நாட்டினுடைய பண்பாட்டினை பிரதிபலித்து நிற்கின்றது என்பது கேள்விக்குரியதே. இருந்தாலும் கலை வெளிப்பாட்டினைப் பொறுத்தவரை அவை மனித சிந்தனையை வெளிப்படுத்தி நிற்பதன் அடிப்படையில் முதன்மை பெநுகின்றதெனலாம். எனவே சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது கலை என்பது விஷேடமாக இந்தியக் கலை வரலாற்றுக்கு முற்றிலும் பொருந்துவதாகின்றது.


இந்தியக் கலைகள்  மேல்நாட்டுக் கலைகளைப் போன்றதல்ல. பேரின்ப நெறிக்குச் சாதனமாகவே பெரும்பாலும் கலைகள் கையாளப்பட்டு வந்தன. கலையைக் கலைக்காக (யுசவகழச யுசவ ளுயமந) வளர்க்கும் நோக்கம் இருந்ததில்லை. சிற்பம், ஓவியம், இசை என்பன ஆத்மீக வாழ்வைப் பெறுவதற்காகவே உபயோகிக்கப்பட்டன. எனவே இந் நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் கலைகளுக்கும், உலக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பெறுவதற்குச் சாதனமாகப் பயன்படுத்தப்படும் கலைகளுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவது இயல்பு ஆகும்.
இயற்கைப் பொருட்கள் கண்ணிற்கு எவ்விதம் தோன்றுகின்றனவோ அவ்விதம் தோன்றுகின்றனவோ அவ்விதமே அவற்றினைப் புனைவது தான் மேல் நாட்டுக் கலையின் நேக்கமாகும். இது ஆங்கித்தில் சுநயடளைஅ (பிரகிருதிவாதம்) எனக் கூறப்படும். ஆனால் இந்தியக் கலைகள் இதற்கு மாறுபட்ட நோக்கத்தைக் கொண்டுள்ளன. இயற்கைப் பொருட்களை பார்ப்பவர் மனத்தில் 'கலை இன்பத்தினை' எழுப்பக்கூடிய விதத்தில் திரிவு பண்ணி அமைத்தலே இந்தியக் கலையின் நோக்கமாகும். 'கலை இன்பமாவது' காவியம், சிற்பம், ஓவியம், இசை என்ற இக் கலைகளின் வாயிலாகத் தூய நிலையின் கண்ணே எழுகின்ற இன்பமாகும். இவ்விதம் பொருட்களை அமைத்தல் னைநயடளைஅ (குறிக்கோள்வாதம்) எனக் கூறப்படுகின்றது. இக்கருத்துக்களை டாக்டர் முல்க்ராஜ் அநந்தர் என்பவர் நயமாக விளக்குகையில், 'இந்தியக் கலைகளின் கண்ணே மாறுதலடையாத ஒரு சமய நோக்கம் உண்டு. மனித வாழ்க்கையின் எல்லாத் தன்மைகளுக்கும் தெய்வீகக் கருத்தே கொள்ளப்படுகின்றது. கலைப் பொருட்களுக்காக காட்டப்படும் உருவங்கள், மரங்கள், மலர்கள், பறவைகள் என்பன யாவும் இயற்கையில் இருந்தே எடுக்கப்பட்டனவாயினும் அவை விண்ணுலக வாழ்வின் இயல்பினைக் காட்டுந் தன்மையுள்ளனவாக அமைக்கப்படுகின்றன. ஓவியத்திலாயினும், சிலையுருவிலாயினும், மட்குடத்திலாயினும் பொறிக்கப்படும் சிறிய ஒரு சித்திரந்தானும் மனிதன் கடவுளை எப் பொருளினுங் காண்கினறான் என்னும் உண்மையை விறங்குவதுமின்றி, கடவுள் எல்லாப் பொருள்களுக்கும் ஒரு தெய்வீக இயல்பினை அளித்திருக்கின்றான் என்பதனையும் மனிதனுக்கு விளக்குவதாகின்றது. இந்தியக் கலையானது எல்லாப் பொருள்களையும் பேரின்ப உணர்ச்சியோடு நோக்குகின்றமையால் அதன் கண்ணே ஐரோப்பியராற் கொள்ளப்படும் பிரகிருதிவாதத்திற்கு இடமேயில்லை' எனக் குறிப்பிடுகின்றார்.
'ஐரோப்பியக் கலையானது இறகுகள் கத்தரிக்கப் பெற்ற பட்சியைப் போல் மேலெழாது நிலப்பரப்பிலுள்ள அழகினை மாத்திரமே அறிகின்றது. இந்த வகையில் ஐரோப்பிய சிற்பம், ஓவியம் முதலியன இயற்கையின் வெளிப்புறத் தோற்ற அமைப்பையும், அழகையும் உருவகப்படுத்திக் காட்டுவதையே தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியக் கலையோவெனில் பிரபஞ்சாதீவு உச்சியுட் புகுந்து, மனம் வாக்கிற்கு எட்டாத உண்மைப் பொருளின் அழகை நிலவுலகிற்கு இழுக்கப் பிரயத்தனப்படுத்துகின்றது' எனக் 'ஹவல்' எனும் கலைப் புலவர் குறிப்பிடுகின்றார்.
இவ் வகையில் ஐரோப்பியக் கலையில் நோக்கத்தினின்றும் முற்றிலும் மாறுபாடு கொண்டமைந்த இந்தியக் கலைகள் தமக்கெனத் தனித்துவமான குண இயல்புகளையும் கொண்டுள்ளன. இந்த வகையில் இந்தியக் கலை மரபைப் பொறுத்த வரை கலைஞனானவன் சாதாரணமான ஒரு புகைப்படக் கலைஞனைப் போன்று இயற்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளான் எனக் கூற முடியாது. ஆனால் புகைப்படக் கலைஞனைப் போன்று இயற்கையிலுள்ள பொருட்களை அவ்வாறே சித்தரிப்பது ஒரு கலைப்படைப்பும் ஆகிவிட முடியாது. எனவே தான் இந்தியக் கலைஞனானவன் இயற்கையைத் தனது கலைப்படைப்புக்குத் துணை மூலங்களாகப் பயன்படுத்தியிருந்தமையினைக் காண முடிகின்றது.
இந்தியக் கலைஞன் தனது கலைப்படைப்பின் பிரதான பொருளாக இயற்கையை என்றுமே கொண்டதில்லை. பெருமளவிற்கு குறியீடுகளையே அவன் தனது கலைப் படைப்பில் கொண்டிருந்தான். இதனால் புராதன இந்தியக் கலைப் படைப்புக்களில் குறியீடுகள் இன்றியமையாத அம்சமாக விளங்குகின்றன. இக்குறியீடுகளானவை கலைஞன் தான் உணர்ந்த வந்த பொருளை நேரடியாக உணர்த்தாமல் மறைமுகமாக உணர்த்துவதற்கு வகை செய்ததன் அடிப்படையில் ஒரு வகையான கற்பித நோக்கிலமைந்த கலை வெளிப்பாடுகளை கலைஞன் வெளிப்படுத்தி நின்றமையைக் காணலாம். இவ்வாறு கற்பித்த நோக்கில் அமைந்த கலை முழுவதும் விரவி வருகின்ற ஒரு பொதுமையான அம்சம் ஆன்மீக விடுதலை என்பதாகும். இத் தன்மையானது பௌத்த, சமண, அஜீவக மதப் பிரிவுகளுக்கெல்லாம் பொதுமையாக அமைந்து விடுகின்றது.
இந்திய மரபில் வாழ்க்கைத் தத்துவம், கலை, சமயம் ஆகியவற்றை தனித்துவப்படுத்தி உணர முடியாத இணைவுத் தன்மைதான் இந்தியக் கலைக்கோ, இந்திய வாழ்க்கைக்கோ, இந்திய தத்துவத்திற்கோ, இந்திய சமயத்திற்கோ உள்ள முழுமைத் தன்மையாகும். இதன் உள்ளார்ந்த சிறப்பைத் தான் பொதுவாக 'இந்தியம்' எனக் குறிப்பிடப்படுகின்றது. எனவே இந்த வகையில் தான் இந்தியக் கலை என்பது வாழ்க்கையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத வாழ்க்கை நடைமுறையைக் கலையாக, ஓர் இனத்தின் வெளிப்பாடாக, தனித்துவமானதுமான பண்புகளைக் கொண்டவாறு பரிணமித்துள்ளது.
இந்தியாவில் ஓர் இனத்தின் அனுபவத்தை வெளிப்படுத்தும் பொருளாக கலை அமைகிறது. அந்த வகையில் நாம் நாள் தோறும் உண்ணும் உணவுப் பொருட்கள் வாழ்கடகையின் முக்கிய தேவையாக அமைகின்றது போன்று அத்தேவையின் பிரதிபலனாகக் கலை ஆக்கப்பட்டு விடுகின்றது. இந்த வகையில் ஐரோப்பியக் கலை மரபினின்றும் இந்தியக் கலையின் தோற்றம், சூழல் என்பன முற்று முழுவதுமாக மாற்றமுற்றிருந்ததனைக் காணலாம்.
தற்கால இந்தியாவில் கலை எனும் போது அது ஓர் இனத்தின் வெளிப்பாடாக அமைந்ததினால் எந்தக் கலை வெளிப்பாட்டினையும் விளங்கிக் கொள்வதற்கு தனித்தனி மனிதனது கலையறிவு அவசியமாகின்றது. இங்கு எந்த ஒரு கலை வெளிப்பாடும் போதனைத் தன்மையில் தங்கியிருப்பதுமில்லை. இந்த ரீதியில் தற்காலத்து கலை பற்றிய கலைப்படைப்பை பற்றி புரிந்து கொள்வதற்கு பொதுவாக அது ஆக்கப்பட்ட காலத்திலும், இடத்திலும் வாழ்ந்தோருடைய அனுபவங்களை விளங்கிக்கொள்ள வேண்டும். குரு சீட முறைப்படி தொழில் முறைகளைக் கற்றுக் கலைப்படைப்புக்களைச் செய்வதனைத் தம் வாழ்க்கைத் தொழிலாக கொண்ட கைவினைத்திறன் படைத்தோரால் தான் இந்தியக் கலை வேலைப்பாடுகளும், ஆக்கங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் இங்கு தனித்துவமும், புதுமையும் முன்னரே திட்டமிடப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட பண்புகளாக அமையவில்லை. புராதன இந்தியாவில் ஒரு காலத்துக்கு கலை மரபில் இருந்து இன்னொரு காலத்துக்கு கலை மரபையும் வேறுபடுத்திக்காட்டும் வடிவ மாற்றங்கள் அவ்வக் கலையினுடைய சமய தத்துவக் கருத்துக்களையும், எழுச்சிகளையும், வளர்ச்சிகளையும் பிரதிபலிப்பனவே தவிர அவை கலைஞருடைய சிறப்பியல்புகளின் விளைவு ஆகாது. இந்தியக் கலை மரபில் ஒவ்வொரு கால கட்டத்திற்குமான தரத்தில் காணப்படும் மாற்றங்கள் அவ்வக்கால கட்ட மக்களினது இயல்பான இன, மனோபாங்கு, வீரியம், ரசணை சம்பந்தமான மாற்றங்களையே பிரதிபலிக்கின்றது.







தத்துவ ஞானிகள் அல்லாத பிறர் எவருமே அழகியற் கோட்பாட்டை ஆராயாத இந்தியாவில் சிற்பம், ஓவியம் போன்ற கலைகள் எல்லா மக்களும் இடம் பெற்ற அன்றாட சூழலிலே ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்றியமையாத பண்பாக விளங்கியதினாற்றான் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அவர்கள் இந்தியக் கலை மரபானது இன்றும் வாழ்க்கையினின்றும் பிரிக்க முடியாதளவிற்கு வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இன்று ஆக்கப்படும் இந்தியக் கலை வடிவங்களுள் பெரும்பாலானவை குரு சீட முறைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் பிராந்திய இன, குண – வம்ச ரீதியான குணவியல்புகளை உடையதாக காணவும் முடிகின்றது.






உசாத்துணை நூல்கள்
1. தென்னிந்திய சிற்பக்கலை நிபுணர்கள் - க.நவரத்தினம்
2. சிவானந்த நடனம் - ஆனந்தகுமாரசுவாமி
3. இலங்கையிற் கலை வளர்ச்சி - க.நவரத்தினம்
4. இந்தியக்கலைக்கோர் அறிமுகம் - கலையோகி ஆனந்தகுமாரசுவாமி
5. இந்தியப் பண்பாட்டு வரலாறு - N.சுப்பிரமணியம

சிந்து வெளி நாகரீகம்



தென்னாசியாவில் முன் தோன்றிய நாகரிகத்தின் வரிசையில் இந்து நதிப் பள்ளத்தாக்கின் இரு மருங்கிலும் தோன்றிய சிந்து வெளி நாகரிகம் மிகவும் பழமையானது. இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனிசிறந்த நாகரிகமாக விளங்கியது என்பதை தொல் பொருளாய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந் நாகரிகத்தின் தோற்றம் பற்றிப் பொதுவாக பல கருத்துக்கள் கூறப்படினும் கி.மு. 3250க்கும் - 2750க்கும் இடைப்பட்ட காலப்பகுதியாக இருக்கலாம் என தொல் பொருளியலாளரான சேர்.ஜோன்.மார்ஷல் கூறுகின்றார். இக் கருத்தினை பொதுவாக வரலாற்றாய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். சேர்.ஜோன்.மார்ஷல் இந் நாகரிகத்தின் தோற்றம் வளர்ச்சி  வீழ்ச்சி நிலை பற்றி அறிவதற்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்களே கிடைக்கின்றன எனக் கூறுகின்றார். மற்றைய நாகரிகங்களுடன் ஒப்பிடும் போது அங்கு காணப்படும் இலக்கியச் சான்றுகளோ பிற எழுத்து மூலமான சான்றுகளோ இங்கு காணப்படாமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தொல் பொருளாய்வாளர்கள் எடுத்துக் காட்டப்படும் சான்றுகளோ இந் நாகரீகம் பற்றி அறிவதற்கான மூலாதாரங்களாக விளங்குகின்றன என்பது நோக்கத்தக்கது.
sinthuvely

மந்திரிமனை – யாழ்ப்பாண அரசின் ஓர் நினைவுச்சின்னம்


இம் மந்திரிமனை யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் நல்லூர் சட்டசாதர் கோவிலின் தென்னெல்லையில் நல்லூர் இராசதானியின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் கம்பீரமான முகப்புத்தோற்றத்துடன் காணப்படுகின்றது. இம்மந்திரிமனை போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியடைவதற் முன்னர் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடமாக இருந்ததென்பது பொதுவான கருத்தாகும்.

இம் மந்திரிமனை 13ம் ஆண்டுக்கும் 17ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டதென்று கருதப்படுகின்றது. இவ்விடம் தமிழ் இராசதானி இருந்த இடம் என்பதால் அக்கால அரசகட்டிடங்கள் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

manthirimanai

ஆயினும் தற்போதைய இம் மந்திரி மனையின் அமைப்பும், கலைமரபும் யாழ்ப்பாண அரசு காலத்திற்குரியவை எனக் கூறமுடியாது. சில சுதேசகலை மரபுகளும், தமிழரின் தொழில்நுட்பமும் கலந்து காணப்பட்டாலும் கட்டிடத்தின் தோற்றமும், அதன் கலைமரபும் யாழ்ப்பாண அரசிற்குப் பின்னர் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பியருக்கும் உரிமையாகக் காணப்படுகின்றன.
இரு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் முன்முகப்பில் வாசல் பகுதியை ஒட்டியவாறு அதன் அரண்டு பக்கங்களிலும் இரு கல்லிருக்கைகள் காணப்படுகின்றன. இங்கு வந்துபோவோர் அமர்ந்திருப்பதற்காக அமைக்கப்பட்டவையாக இவை இருக்கலாம். இதிலிருந்து இக்கட்டிடம் ஒரு நிர்வாக மையமாக அல்லது சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த  ஒருவரின் இருப்பிடமாக இருந்ததென்பது தெரிகிறது.

இவ்விருக்கைகளுக்கு முன்னால் உயர்ந்த வேலைப்பாட்டுடன் கூடிய வீட்டுக் கதவு காணப்படுகிறது. அதனைக்கடந்த பெரியதொரு மண்டபம் காணப்படுகிறது. அம் மண்டபத்திற்கு மேற்கே இரண்டு அறைகளும் தெற்கே ஒரு அறையும் காணப்படுகிறது. ஏறத்தாழ இதே அமைப்பே மேல்மாடியிலும் காணப்படுகின்றது. மேல் மாடிக்குச் செல்வதற்காகத் தெற்குப் பக்க அறையை ஒட்டியதாக மரத்தாலான படிகள் காணப்படுகின்றன. காற்றோட்ட வசதிக்காக அமைக்கப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் உயர்ந்த கூரை தற்கால கூரை அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமான அம்சமாகக் காணப்படுகிறது.

manthiri manai


மேலும் இம்மனையின் பின்புறத்தில் நில அறை ஒன்றும் அதற்கு மேல் மூடுசாந்தினால் அமைக்கப்பட்ட மண்டபமும் இருந்ததாக தெரிகிறது. தற்போது இவை இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்விடத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் சுரங்க வாசல் ஒன்று பிற்காலத்தில் அடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதே போல் வீட்டிற்குள்ளே இருந்த நிலவறையும் அதற்குள் இறங்கிச் செல்ல இருந்த படிக்கட்டுகளும் பிற்காலத்தில் அடைக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கட்டிடத்திற்கும் 'ஜமுனா' ஏரிக்கும் இடையே சுரங்கப்பாதை இருந்ததாக நம்பப்படுகிறது. இக்கட்டடத்தின் சிறப்பான அம்சங்களாக மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளால் காணப்படுகின்றன. மரச்சிற்பத்திலான சிற்ப வேலைப்பாடுகளால் காணப்படுகின்றன. மரச்சிற்பத்திலான பொதிகையின் மேல் இரண்டு யானைத்தந்தங்களைப் பொருத்தியது போன்ற வளைவிலான இரு மரச்சட்டங்கள் கூரை முகட்டினைத் தாங்கி நிற்பது பார்ப்போரைக் கவர்வதாகவுள்ளது. இதன் கலைமரபு பிற்பட்ட ஒல்லாந்தர் கால கலைப் பணியை நினைவுபடுத்தினாலும் கட்டடத்தின் உள்ளே காணப்படும் மரத்தினால் செதுக்கப்பட்ட தூண்கள், சிறந்த தொழில் நுட்பத்துடன் கூடிய பொதிகைகள் யாழ்ப்பாண அரசு காலத்தைச் சார்ந்தவையாக அல்லது அக்கால கலைமரபைப் பின்பற்றி பிற்காலத்தில் வடிவமைப்பட்டதாக காணப்படுகின்றன எனலாம்.

இம் மந்திரிமனையை ஐரோப்பியர் கால நினைவுச் சின்னமாக எடுத்துக்கொண்டாலும் அதற்குள் யாழ்ப்பாண அரசுகால வரலாறும் மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. கி.பி.1619 இல் யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்ட போர்த்துக்கேயரும், பின்னர் ஆட்சி செய்த ஒல்லாந்தரும் யாழ்ப்பாண அரசு கால ஆலயங்கள் கட்டடங்களை அழித்து அப்பொருட்களைப் பயன்படுத்தியே தமது ஆலயங்கள், கோட்டைகள், துறைமுகங்கள், நிர்வாக மையங்கள் என்பவற்றை அமைத்ததாக அவர்களது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதை யாழ்ப்பாணக் கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களும், இந்து விக்கிரகங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இவை இவை பெரும் பாலும் கடற்கரை சார்ந்த இடங்களிலேயே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் மந்திரிமனை அமைந்த நல்லூர்ப்பிரதேசம் கடற்கரை சார்ந்த இடமல்ல. அப்படியிருந்தும் ஐரோப்பியர் இருந்தமைக்குக் காரணம் ஏதோ இருக்க வேண்டும்.

யாழ்ப்பாண அரசு தொடர்பாகத்தோன்றிய பிற்கால இலக்கியங்கள் நல்லூர் இராசதானி காலத்தில் இருந்த ஆலயங்கள், கோட்டைகள், துறைமுகங்கள், அரசமாளிகைகள், இருப்பிடங்கள் பற்றிப் பலவாறு கூறுகின்றனர். போர்த்துக்கேய ஆசிரியரான கெய்ரோஸ் யாழ்ப்பாணத்தில் பெரிதும், சிறிதுமாக இருந்த 500 ஆலயங்களை இடித்தழித்ததாகக் குறிப்பிடுகிறார். அக்கட்டிடப் பொருட்களைப் பயன்னடுத்தியே தமது கட்டிடங்களை அமைத்ததாகத் தெரிகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் மண், மரம், கல் என்பவற்றைக் கலந்து கட்டிய கட்டிடங்களே காலப்போக்கில் ஒல்லாந்தராலும், ஆங்கிலேயராலும் கற்கள் கொண்டு மீளக்கட்டப்பட்டன.
இவ்வரலாற்றுப் பின்னணியை நோக்கும் போது யாழ்ப்பாண அரசு காலத்தில் அவரட்களின் நிர்வாக மையமாக இருந்த ஒரே இடமாக மந்திரிமனை இருந்திருக்கவேண்டும். அதைக்கைப்பற்றிய போர்த்துக்கேயரும் பின் ஆதிக்கம் செலுத்திய ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் காலமாற்றத்திற்கு ஏற்ப சமகாலக் கலைமரபைப் பயன்படுத்தி மந்திரிமனையை மீளமைத்திருக்க வேண்டும். ஆயினும் இதைக் கட்டுவித்தவர்கள் ஐரோப்பியராக இருந்தாலும் கட்டியவர்கள் யாழ்ப்பாணத்து மக்களாக இருக்க வேண்டும்.

 அதனால் தான் கட்டிடத்தில் காணப்படும் கலைவேலைப்பாடுகள் பல தமிழரின் பாரம்பரிய கலை மரபுகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன. ஆகவே மேலோட்டமாகப் பார்ப்போருக்கு தற்போதைய மந்திரிமனையின் தோற்றம் ஐரோப்பியரின் நினைவுச் சின்னமாகத் தெரியலாம். ஆனால் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அதற்குள் யாழ்ப்பாண அரசின் வரலாறும் மறைந்திருப்பதைக் காணலாம்.
இம் மந்திரிமனையின் வரலாற்றுச் சிறப்புக்கருதி தற்போது அது அரச நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது. இதன் வரலாற்றுப் பழமையையும், அதன் வரலாற்றுப் பெறுமதியையும் உணர்ந்த யாழ்ப்பாண மாவட்ட சபை, மாநகர சபை, மாவட்ட செயலகம் என்பன 1984ஆம், ஆண்டு 1990ம் ஆண்டு, 1994ம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ் நினைவுச் சின்னத்தை அதன் பழமை மாறாத வகையில் பாதுகாப்பதற்குப் பல முயற்சிகளை எடுத்து வந்தன. ஆயினும் தற்போது அதன் தோற்றமும் பழமையும் அழிவடைந்து போகும் நிலையிலேயே காணப்படுகின்றன.



உசாத்துணை நூல்கள்
1. நடராசா.க. 2011 வரலாற்று உலா கமலம் பதிப்பகம் பக். 49-51.

2. நகுலன்.க. 2014 யாழ்ப்பாணத்து மரபுரிமைச் சின்னங்கள் கமலக்கண்ணன் பிறின்ரேர்ஸ் பக்.28-30.

  தமிழர் வாழ்வியலை உள்ளடக்கிய கற்பித்தல் முறை தமிழர் இல்லாத நாடு இல்லை ஆனால் தமிழர்க்கு என்று ஒரு நாடில்லை என்று நோக்கும் இற்றைக்கு மூவாயி...